ஜோதிடம்
வீட்டின் அதிபதி யார் –பாகம் 1
இராசி ஜோதிடம்
நாம் ஜோதிடம் பயில தொடங்கியபோது ’மேச இராசி அதிபதி செவ்வாய்; ரிஷ்ப இராசி அதிபதி, சுக்கிரன்’ என்றும்: ‘மேச லக்னத்திற்கு 9ம் அதிபதி குரு; 10ம் அதிபதி சனி’ என்றும் பழகினோம்.
பலன் சொல்லும்போது வீட்டு அதிபதி எங்கு உள்ளார்? அவ்வீட்டில் யார் அமர்ந்துள்ளார்? அவ்வீட்டை யார் பார்க்கிறாரென கவனித்து பலன் சொன்னோம். எனவே இம்முறையை ‘இராசி ஜோதிடம்’ என்போம். இது இள நிலை ஆகும்.
சார ஜோதிடம்
இராசி ஜோதிடத்திற்கு மேல்நிலை சார ஜோதிடம் ஆகும். இம்முறையில் லக்னம் இருக்கும் இராசி அதிபதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதற்குப்பதிலாக லக்னம் இருக்கும் நட்சத்திரத்தையும்; அந்த நட்சத்திரத்தின் அதிபதி இருக்கும் நிலை அறிந்தும் பலன் சொல்வோம். மேலும் ஒரு கிரகம் எந்த இராசியில் இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் அக்கிரகம் இருக்கும் நட்சத்திர அதிபதிக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நட்சத்திர அதிபதி இருக்கும் நிலை அறிந்து பலன் சொல்வோம்.
உதாரணமாக கடக இராசியில் லக்னம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இராசி ஜோதிட முறையில், இதன் அதிபதி சந்திரன் ஆவார். சார ஜோதிட முறைக்கு இது தேவையில்லை. ஏனெனில் கடக இராசியில் புனர்பூசம். பூசம், ஆயில்யம் என மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றின் அதிபதி முறையே குரு,சனி மற்றும் புதன் ஆவர். இம்மூவரில் யாருடைய சாரத்தில் லக்னம் உள்ளதென கவனித்து பலன் சொல்கிறோம்.
நட்சத்திர அதிபதியையே சாரம் என்கிறோம். எனவே இம்முறையை சார ஜோதிடம் என்போம். இது இடைநிலை ஆகும்.
உயர்நிலை
இடைநிலைக்கு மேல்நிலை, உயர்நிலை ஆகும். இம்முறையில் ஒரு நட்சத்திரத்தின் கோண அளவான பாகை 13.20-ஐ 9 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு கிரகத்தை அதிபதியாக நியமித்துள்ளனர். இது விம்சோத்தரி தசை முறையை அடிப்படையாக கொண்டது. இதுபற்றி பின்னால் விளக்கப்படும்.
காரணம்
இனி இம்முறையை உயர்நிலை என அழைப்பதற்கான காரணத்தை காண்போம்.பூமியின் சுழற்சியே லக்ன கணிதத்திற்கு ஆதாரம் ஆகும். பூமி ஒரு முறை சுழல, 23 மணி, 56 நிமிடங்கள் ஆகிறது. இவ்வாறு பூமி சுழலும்போது, பூமியில் உள்ள நபர், பூமியை சுற்றியுள்ள 12 இராசிகள்; 27 நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை காண்பார்.
சுமார் 24 மணி நேரத்தில் 12 இராசிகளை காண்பதால், ஓர் இராசியை முழுவதுமாக காண, 2 மணி நேரம் (120 நிமிடங்கள்) ஆகும். அவ்வாறு காணும்போது பூமியில் உள்ள நபருக்கு கிழக்கு திசையில் தெரியும் இராசியையே, லக்னம் என்கிறோம். இதையே முதல் வீடு என்றும் சொல்கிறோம்.
ஓர் இராசிக்கு 30 பாகைகள் ஆகும். ஓர் இராசியை முழுவதும் காண 2 மணி நேரம் எனும் 120 நிமிடங்கள் ஆகுமென சற்றுமுன் பார்த்தோம். எனவே ஒரு பாகையை கடக்க 4 நிமிடங்கள் ஆகும். எனவே ஒரு நட்சத்திரத்தின் கோண அளவான பாகை 13.20-ஐ கடக்க 53 நிமிடங்கள் ஆகும்.
இனி முக்கிய விசயத்திற்கு வருவோம். கவனமாக படிக்கவும். இராசி ஜோதிட முறையில் ஓர் இராசியே இரண்டு மணி நேரத்திற்கு லக்னமாக இருக்கும். ஆனால் சார ஜோதிட முறையில் ஒரு நட்சத்திரம், 53 நிமிடங்களுக்கு லக்ன நட்சத்திரமாக இருக்கும்.
உதாரணமாக இப்போது காலை மணி 6.00 என்றும்; இப்போதுதான் மேச இராசி லக்னமாக தொடங்கியதாக வைத்துக் கொள்வோம். எனவே சுமார் மணி 8.00 வரை மேசம் இராசியே லக்னமாக இருக்கும். இராசி ஜோதிட முறையில் மேச லக்னத்தின் அதிபதி செவ்வாய் என்போம்.
இனி சார ஜோதிடத்திற்கு வருவோம்.இப்போது காலை மணி 6.00 என்றும்; இப்போதுதான் மேச இராசி லக்னமாக தொடங்கியதாக கொள்வோம். மேச இராசியில் அசுவனி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பகுதியும் உள்ளன. சற்றுமுன் லக்ன நட்சத்திரமாக அமையும் நட்சத்திரம், 53 நிமிடங்களுக்கு லக்ன நட்சத்திரமாக இருக்குமென பார்த்தோம்.
எனவே காலை மணி 6.00 முதல் 6.53 வரை அசுவனி நட்சத்திரமே லக்ன நட்சத்திரமாக இருக்கும். அசுவனி நட்சத்திர அதிபதி கேது ஆவார். எனவே 1ம் வீட்டு அதிபதியாக கேது அமைவார். மணி 6.53 முதல் 7.46 வரை பரணி, லக்ன நட்சத்திரமாக இருக்கும். பரணி நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆவார். எனவே மேற்கண்ட நேரத்தில் பிறந்த குழந்தைக்கு சுக்கிரன் 1ம் அதிபதியாக அமைவார். அதன்பின் ஒவ்வொரு 53 நிமிடங்களுக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன் என உடுதசை முறையில் 1ம் அதிபதி மாறுவர்.
ஆனால் நடைமுறையில் இவ்வளவு நேர இடைவெளியில் குழந்தைகள் பிறப்பதில்லை. பெரிய மருத்துவமனைகளில் ஒருசில நிமிட இடைவெளியில் குழந்தைகள் பிறப்பதை காண்கிறோம். இரட்டை குழந்தைகள் கூட ஓருசில நிமிட வித்தியாசத்திலேயே பிறக்கின்றன.
இரட்டை குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கும்போது இராசி, நவாம்சம் தவிர
பல வர்க்க சக்கரங்கள் ஒன்றுபோலவே இருக்கும்.மேலும் வர்க்க சக்கரங்களை கொண்டு பலன் சொல்வதற்கான விதிமுறைகள் தெளிவாக இல்லை. எனவே தற்போதைய ஜோதிட முறையை மேம்படுத்த வேண்டிய அவசியம் உண்டாகிறது.
இதற்கு விம்சோத்தரி தசை முறை அடிப்படையாக அமைகிறது. முதலாவதாக விம்சோத்தரி தசையில் உள்ள கிரக வரிசை பயன்படுத்தப்படுகிறது. விம்சோத்தரி தசை முறையில் தசைகள் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன்...எனும் வரிசையில் அமையும். கேது தசையில் முதல் புத்தி கேது புத்தியும்; அதை தொடர்ந்து சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன் புத்திகள் அமையும். சுக்கிரன் தசையில் முதல் புத்தி சுக்கிரன் புத்தியும்;அதை தொடர்ந்து சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, குரு, சனி, புதன், கேது புத்திகள் அமையும். இதேபோல் ஒவ்வொரு தசையின் முதல் புத்தியாக அந்தந்த தசையே அமையும். அதை தொடர்ந்து வரும் அடுத்தடுத்த புத்திகள் மேற்சொன்ன விம்சோத்தரி தசை முறையில் அமையும்.
அடுத்தபடியாக ஒரு நட்சத்திரத்தின் அளவான பாகை 13.20, ஒவ்வொரு கிரகத்திற்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தசை வருட அடிப்படையில் 9 பாகங்களாக (புத்திகளாக) பிரிக்கப்படுகிறது. (தொடரும்)